தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த நியமனங்களில் அரசியலும் சாதியும் சமபங்கு வகிக்கின்றன.
இந்த வகையில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நியமனம் அதிமுகவின் மாவட்டப் பிரமுகர்களுக்கு இடையே புகைச்சலைக் கிளப்பியுள்ளது..
நூற்றுக்கணக்கான கோயில்களைக் கொண்ட குமரி மாவட்டத்தின் அறங்காவலர் குழுத் தலைவராக அதிமுகவின் ஆரம்பகால பிரமுகரான சிவ குற்றாலம் நேற்று (நவம்பர் 22) குமரி மாவட்டம் சுசீந்திரம் அறநிலையத்துறை அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தின் தேர்வாக இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை 11.45 க்கு நல்ல நேரம் இருப்பதால் பதவியேற்பு நேரம் குறித்தனர். ஆனால் தளவாய் சுந்தரம் தென்காசி மாவட்ட துவக்க விழாவுக்கு முதல்வரோடு சென்றுவிட்டார். எனவே அவருக்காக காத்திருந்தனர். ஆனால் விழா முடிந்து தூத்துக்குடி சென்று முதல்வரை விமானம் ஏற்றிவிட்டுத்தான் திரும்புவதாகச் சொல்லிய தளவாய், ‘நான் வரலைன்னா பரவாயில்லை. நீங்க பதவியேத்துக்கங்க’என்று கூறியபிறகே அறங்காவலர் குழுத் தலைவரும் உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்கிடையில், அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு ராஜ்ய சபா எம்பியான விஜயகுமார் சிபாரிசு செய்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டார்கள் என்ற குரல் அதிமுகவில் ஓங்கி ஒலிக்கிறது.
“சிவ குற்றாலம் அதிமுக காரர் தான். அதில் எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகமான நாடார் சமூகத்துக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் சமூக நீதியாக இருக்கும். ஆனால் தளவாய்சுந்தரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி குமரி, நெல்லை, தூத்துக்குடி அரசியலை தனது விருப்பம் போல நடத்திவருகிறார். அதன் ஒரு பகுதிதான் இந்த நியமனமும். இதை எதிர்த்து சட்டரீதியாக போராடுவோம் ” என்கிறார்கள் அதிமுகவிலேயே சிலர்.
இதற்கிடையில் அதிமுக ராஜ்யசபா உறுப்பினரான சசிகலா புஷ்பா இந்த நியமனத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் “நாடார் சமூகத்தினர் 70% பேர் வாழும் குமரி மாவட்டத்தில் இந்த நியமனம் மூலம் அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தளவாய் சுந்தரத்தின் தவறான வழிகாட்டுதலை முதல்வர் எடப்பாடி தொடர்ந்து பின்பற்றினால் அரசியல் ரீதியாக குமரி மாவட்டத்தில் அதிமுக பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
அறங்காவலர் குழு விவகாரம் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.�,”