விலை உயரும் ஊட்டி உருளைக்கிழங்கு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

Published On:

| By Balaji

ஊட்டியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குக்கு தற்போது ரூ.50 முதல் 60 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்கு விளையும் கிழங்குகளை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மண்டிகளில் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த வாரம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ.40-க்கு கீழ் விற்பனையாகி வந்த உருளைக்கிழங்கு தற்போது ரூ.55 முதல் 60 வரை விலை போகிறது. ஊட்டி நகராட்சி சந்தையில் நேற்று (ஜூலை 18) நடத்தப்பட்ட ஏலத்தில் உருளைக்கிழங்கின் தரத்துக்கு ஏற்றவாறு கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 60 வரை விலை போனது. உரிய விலை கிடைத்து வருவதால் பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள உருளைக்கிழங்கு விவசாயி ஒருவர், “உருளைக்கிழங்கில் எப்போதும் பெருசா லாபம் ஒண்ணும் கிடைக்காது. போன வாரம் வரை விலை ரொம்ப குறைவா இருந்தது. இந்த வாரம் கொஞ்சம் பரவாயில்ல. இந்த விலை கிடைச்சா போட்ட முதல் வந்துடும்” என்றார் மகிழ்ச்சியாக.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share