பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள அம்னெஸ்டி அமைப்பின் அலுவலகங்களில் சிபிஐ நேற்று(நவம்பர் 15) அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
அம்னெஸ்டி என அழைக்கப்படும் சர்வதேச மன்னிப்பு சபை, உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளையும், உலகில் பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் ஒப்பிட்டு அவ்வாறு மனித உரிமைகள் மதிக்கப்படா இடங்களில் அதை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கும் ஓர் அமைப்பாகும். அமைதிக்கான நோபல் பரிசு உள்ளிட்ட முக்கிய விருதுகளை பெற்றுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (எஃப்.சி.ஆர்.ஏ) மீறியதாகக் கூறப்படும் வழக்கில், பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஏ.ஐ.ஐ.பி.எல்) மற்றும் இந்தியர்களுக்கான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் டிரஸ்ட் (ஐ.ஏ.ஐ.டி) அலுவலகங்களில் சிபிஐ நேற்று(நவம்பர் 15) திடீர் சோதனையை நடத்தியது.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ரூ .36 கோடி சம்பந்தப்பட்ட எஃப்.சி.ஆர்.ஏ மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, நவம்பர் 5 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் பெங்களூரில் மூன்று இடங்களிலும், டெல்லியில் ஒரு இடத்திலும் தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று தெரிவித்தார்.
AIIPL, IAIT, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அறக்கட்டளை (AIIFT) மற்றும் அம்னெஸ்டி சர்வதேச தெற்காசியா அறக்கட்டளை ஆகிய அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
குற்றச்சாட்டில் கூறியுள்ளபடி, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட், இங்கிலாந்தில் உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்திடமிருந்து நிதி பெறுவதில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (ஏ.ஐ.ஐ.பி.எல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளது.
51 கோடியே 72 லட்ச ரூபாய் சம்பந்தப்பட்ட அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாகக் கூறி அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை தொடர்ந்து, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மீது சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வருவாய்த் துறையின் குறிப்பில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது.
இங்கிலாந்திலுள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வேறு சில அமைப்புகள், விதிகளை மீறி அம்னெஸ்டி இந்தியாவுக்கு நிதி அனுப்புவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “எப்போதெல்லாம் அம்னெஸ்டி இந்தியா அமைப்பு, இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் பற்றி குரல் எழுப்புகிறதோ, அப்போதெல்லாம் இதே போன்ற துன்புறுத்தல்கள், தொல்லை கொடுத்தல்கள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களுடன் முழுமையாக இணங்குவதாக அம்னெஸ்டி இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவில் எங்களுடைய பணி, உலகளாவிய மனித உரிமைகளை நிலைநிறுத்துவதும், அதற்காக போராடுவதுமாகும். இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள பன்மைத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் நீண்ட பாரம்பரியத்தை அதே மதிப்புகளுடன் காக்கத்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
�,”