pஏடிஎம் கொள்ளை: டெமோ காட்ட சொன்ன காவல்துறை!

Published On:

| By Balaji

சென்னை எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமீரை ஏடிஎம்முக்கு அழைத்துச் சென்று எவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நடித்துக் காட்ட சொல்லி காவல்துறையினர் வீடியோ எடுத்தனர்.

தமிழ்நாட்டில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களைக் குறிவைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் அமீர் ஹர்ஷ், வீரேந்தர் என்ற இரண்டு கொள்ளையர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

கொள்ளையர்கள் விமானம், ஜீப், லாரி மூலமாக சென்னை வந்துள்ளனர். சென்னையில் தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி, வாடகைக்கு பைக் ஒன்றை எடுத்து, கூகுள் மேப் மூலம் ஏடிஎம் மையங்களைக் கண்டறிந்து கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட அமீர் ஹர்ஸை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் நான்காவது நாளான நேற்று, அமீரை பெரியமேடு ஏடிஎம் மையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர், எப்படி பணம் திருடப்பட்டது என்பதை நடித்துக் காட்ட சொல்லி வீடியோ பதிவு செய்தனர்.

சென்னையில் 15 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்திருந்தாலும், பெரியமேடு ஏடிஎம்மில் மட்டும்தான் கிட்ட 190 முறை போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.18.30 லட்சம் வரை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அந்த அடிப்படையில் பத்து நொடிகளுக்குள் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எவ்வாறு ஏடிஎம் டெபாசிட் மெஷினிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பதை கிட்டதட்ட அரை மணி நேரம் அமீர் விளக்கிக்கொண்டே நடித்துக் காட்டினார்.

இதில், இரண்டாவதாக கைது செய்யப்பட்ட வீரேந்திரனை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தரமணி காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று( ஜூன் 29) வரும் எனக் கூறப்படுகிறது.

மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நசீம் ஹுசைனை ஹரியானாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share