சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் 23ஆம் தேதி பெளர்ணமியை முன்னிட்டு இன்று (ஜூலை 21) முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கோயில் அமைந்துள்ள பகுதி வனத்துறைக்குட்பட்டதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் இன்று (ஜூலை 21) ஆடி பிரதோஷம் மற்றும் 23ஆம் தேதி பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற வரும் பக்தர்கள் அடிவாரத்தில் கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், போதிய சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன. பீடி, சிகரெட் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மேலும், மலை பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 7 முதல் 10ஆம் தேதி வரை பிரதோஷம், அமாவாசைக்காக சதுரகிரி மலை கோயில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மலைப்பகுதியில் பெய்த மழையால் பிரதோஷ தினத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மறு நாளான 8ஆம் தேதி மழை பெய்யாததால் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் அன்று மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கனமழை பெய்ததால் மலைக்குச் சென்ற பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.
**-ராஜ்**
.�,