சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். அதன்பின், நவம்பர் 14 ஆம் தேதி கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தினார். ஆளுநரின் இந்த ஆய்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழக அமைச்சர்கள் கூட இல்லாமல் நடந்த இந்த ஆய்வு ஆளுநரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று கூறி பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.
இதையடுத்து, கோவையில் தூய்மை இந்தியா பணிகளைப் பார்வையிட்ட ஆளுநர், திருப்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் மரம்நடும் விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், தற்போது கிண்டி ராஜ்பவன் மாளிகைக்குள் முட்டை உள்பட எந்த அசைவ உணவுகளுக்கும் அனுமதி இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தடை போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசைவ உணவுகளைச் சமைத்து சாப்பிட மட்டுமல்லாமல், வெளியிலிருந்து வாங்கி வந்து உண்ணவும் ஆளுநர் தடை விதித்துள்ளார். மேலும், ஆளுநர் மாளிகை வளாகத்துக்குள் சைவ உணவை மட்டுமே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.�,