கொரோனா காலத்தில் பணியாற்றிய மயானப் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை தவிர மற்ற துறையை சார்ந்தவர்களும் மக்களுடன் நேரடி தொடர்பில் பணியாற்றி வந்ததால் அவர்களையும் முன்கள பணியாளர்கள் என அரசு அங்கீகரித்தது.
ஒன்றிய, மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல் படை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோரை முன்கள பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
மேலும், தொழிற்சாலைகள் ,தனியார் நிறுவனங்கள் ,தங்கும் விடுதிகள் ,உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கட்டட தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் ,அனைத்து பள்ளி ,கல்லூரி ஆசிரியர்கள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி இலவசமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் ஆணைப்படி, மயானப் பணியாளர்கள் ஒன்றிய அரசின் முன்களப் பணியாளர்களின் பட்டியலில் இல்லாவிட்டாலும், கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயானப் பணியாளர்களை முன்கள பணியாளர்கள் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அங்கீகரிப்பின் மூலம், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் மற்றும் தடுப்பூசி செலுத்துவதிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,