சிவப்பு அரிசி எனப்படும் டிகேஎம் 9 ரக அரிசியைக் கொள்முதல் செய்வதை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிகேஎம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும்போது, அரிசி சிவப்பு நிறத்திலும், சற்று பருமனாகவும் இருக்கும். அதனால், இவ்வகை அரிசியினை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் மக்கள் வாங்க விரும்புவதில்லை.
இந்த ரக நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கூட இந்த அரிசியைப் பயன்படுத்த விரும்புவதில்லை.
பொதுமக்கள் விரும்பாத நிலையில், டிகேஎம் 9 ரக அரிசியை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிப்பதைத் தவிர்க்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதனால், எதிர்வரும் 2022-2023 பருவத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக டிகேஎம்9 ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை அரசு கைவிடுகிறது.
தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் பிற சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற்று கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-வினிதா