தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டையில், பரிசுப்பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாளை மார்ச் 3ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் போட்டி நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டது. போட்டி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்ட நிலையில் தேர்தல் விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு விழாவை அமைதியாகவும் பரிசுப்பொருட்கள் வழங்காமலும் அரசியல் நிகழ்வுகள் கலக்காமலும் தேர்தல் விதியை பின்பற்றி போட்டியை நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
**-பிரியா**�,