பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: முதல்வர் கடிதம்!

Published On:

| By Balaji

கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட தலைநகர் சென்னையில்தான் கொரோனா அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 30, 152 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 20,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஊரடங்கில் அளித்துள்ள தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதால், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 7) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “கடந்த இரண்டு மாதங்களாக ஒரு காட்டாற்று வெள்ளத்தைக் கடப்பது போல, மிகவும் இக்கட்டான காலச் சூழ்நிலையை உங்களின் ஒத்துழைப்பு மற்றும் பேராதரவுடன் நாம் கடந்து வந்துள்ளோம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, நாம் அனைவரும் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் கற்பனை செய்ய இயலாதவை.

ஒரு திருமணத்திற்கோ, நெருங்கியவர்களின் இறுதி சடங்குகளிலோ கூட கலந்து கொள்ள முடியாத துயரங்களை எல்லாம் கொரோனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில், இந்த கொரோனா வைரஸ் நம் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டும் அல்லாமல், நம் பொருளாதாரத்தையும் பாதித்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்த ஊரடங்கினால் பல்வேறு கட்டுப்பாடுகளையும், சிரமங்களையும் நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். சுறுசுறுப்பான நீங்கள், வீட்டிலேயே முடங்கியிருப்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை நான் அறிவேன். இருப்பினும், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத உலகத்திற்கே புதியதான இந்த தொற்றினை எதிர்கொள்ள பொருளாதார வளமிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அசாதாரண முன்னெச்சரிக்கையும், கட்டுப்பாடும் நமக்கு தேவைப்பட்டது. தனி மனித உறுதியும், ஒழுக்கமுமே, கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காக்கும் என்பதனை நாம் உணர்ந்து செயல்பட்டு வருகிறோம்” என்று விளக்கிய முதல்வர், தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பொருளாதாரம் முடங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார்.

அரசின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விவரித்த முதல்வர், “25.3.2020 முதல் 5.7.2020 தேதி வரை, மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த தாழ்வழுத்த நுகர்வோர்கள், தங்களது மின்இணைப்பிற்கான மின் கட்டணத்தை 6.7.2020 தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணம் இன்றி செலுத்தலாம்.

மேலும், தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி 25.3.2020 முதல் 14.6.2020 தேதி வரை இருப்பின், அவர்கள் 15.6.2020 தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது” என்ற தகவலையும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களை மீட்கும் இந்த நடவடிக்கையில் சரியான வழிமுறைகளை எந்தவிதமான அச்சமின்றி நேர்மையுடனும், உண்மையுடனும், உங்களின் மக்கள் நல அரசு எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டதோடு, “ ஊரடங்கினை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது.வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், பொது மக்கள் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவ வேண்டும். மேலும், பொது மக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப் பிடித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும், உணவு பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share