பெரம்பலூரில் துணிகரம்: நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை!

Published On:

| By Balaji

பெரம்பலூரில், கொள்ளையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து 52 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரம்பலூர் மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகச் சொல்கிறார்கள். சற்று கண் அசந்தாலும் தங்கள் வீடுகளில் கொள்ளை போய் விடுமோ என்ற அச்சம் இருப்பதாகப் புலம்புகிறார்கள்.

பெரம்பலூரில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு குற்றங்களைக் கண்டறிய ஒரு க்ரைம் இன்ஸ்பெக்டர் கூட இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மின்னம்பலத்தில் [கொள்ளையோ கொள்ளை: பெரம்பலூரில் பறிபோன நிம்மதி](https://minnambalam.com/public/2021/02/23/20/crime-rates-increased-in-perambalur-district) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்

இந்த சூழலில் நேற்று (மார்ச் 9) இரவு வேப்பந்தட்டை அருகே உள்ள ஒரு வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து 52 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

வேப்பந்தட்டை அருகே உள்ள நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவரது மனைவி தீபா, தனது இரு குழந்தைகள் மற்றும் பெரியம்மா ராஜலட்சுமியுடன் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

வழக்கம்போல் ராஜலட்சுமி வீட்டின் முன் அறையிலும், தீபா மற்றும் குழந்தைகள் தனி அறையிலும் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் முன்பக்க கதவைச் சத்தமின்றி உடைத்து உள்ளே நுழைந்து இருக்கின்றனர். அங்குத் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவிலிருந்து 52 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு வீட்டின் பின்பக்கம் வழியாக சுவரேறி குதித்து தப்பி சென்றிருக்கின்றனர்.

இன்று (மார்ச் 10) காலை எழுந்து பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் பீரோ கதவு திறந்து கிடந்ததைக் கண்டு ராஜலட்சுமி மற்றும் தீபா இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னரே நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை அறிந்த அவர்கள் கைகளத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகையும் சேகரித்தனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு இருபத்தி ஒரு லட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share