தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகைக் கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் அதிகபட்சம் ஆறு பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இந்தத் திட்டத்தின் கீழ்பயன் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.inஇல் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை சென்னை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை உதவி இயக்குநர், மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை ஆணையர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள், மூன்றாவது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571 அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி படகின் வரைபடம் தகுதி வாய்ந்த கப்பல் / மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
மேலும், இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை உதவி இயக்குநர், மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு, மீன்பிடி துறைமுக வளாகம், காசிமேடு, சென்னை-13 – தொலைபேசி எண்: 044-25986080 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.�,