tகாவல் துறையினருக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை!

Published On:

| By Balaji

கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றி வரும் காவல் துறையினருக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், மருத்துவத் துறையினர், காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே சுகாதார மற்றும் பத்திரிகை துறையில் உள்ளவர்களுக்கும் இழப்பீடும், ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளான இன்று(ஜூன் 3) காவல் துறையினருக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா பெருந்தொற்று, உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக காவல்துறைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு முன்களப் பணியாளர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் காவல்துறையைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 பேருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் இரவு,பகல், வெயில், மழை என்று பாராமல் வேலை பார்த்து வரும் காவல்துறையினருக்கும், வேலையை பார்க்காமல் வீட்டிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரே சம்பளம். காவல் துறையினரின் பணிக்கு பாராட்டு, ஊக்கத்தொகை, விடுமுறை என எதுவும் கிடையாது என காவல்துறையினரிடையே குமுறல் இருந்தது.

இதையடுத்து, காவல் துறையினருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஊக்கத்தொகை அறிவிப்பு காவல் துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share