சர்க்கரைக்கான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று (நவம்பர் 19) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
சர்க்கரைக்கான ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசிக்கான ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் நேற்று (நவம்பர் 19) தெரிவித்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10 லட்சத்து 19,491 ரேஷன் அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன. இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலை இணைத்து, நேற்று (19.11.2019) முதல் 26.11.2019 வரை [https://www.tnpds.gov.in/](https://www.tnpds.gov.in/) என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.�,”