கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸின் முதல் நாளில் வெறும் 4 சதவிகித பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்ததாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 29-ஆம் நாளான நேற்று இரண்டாம் டோஸ் போடும் பணி தொடங்கியது. முன்னதாக 1,69,215 அமர்வுகளில் 80,52,454 சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்ட முதல் நாளான ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,91,181 ஆகும். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்வதற்கு முன் வரவில்லை என்பது சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.
வெறும் 4 சதவிகிதம் அதாவது, 7,688 பயனாளிகள் மட்டுமே நேற்று இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள முன் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசி விதிமுறைகளின் படி, முதல் டோஸ் போட்டுக்கொண்ட 4 முதல் 6 வாரங்களில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். அதன்படி ஜனவரி 16ஆம் தேதி போட்டுக்கொண்ட அனைவரும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகக் குறைந்த எண்ணிக்கையில் போட்டுக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள், “முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பலர் பாதகமான எதிர்வினைகளை எதிர்கொண்டதால் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள பயனாளிகள் தயக்கம் காட்டுகின்றனர்” என்று கூறுகின்றனர்.
**-பிரியா**
�,