வெற்றிக்கு காரணம் சென்னை ரசிகர்களே… நெகிழ்ந்த கோலியும் அஷ்வினும்

Published On:

| By Balaji

முதல் டெஸ்ட்டில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த இந்தியா, இரண்டாவது டெஸ்ட்டில் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோலியும் அஷ்வினும் நெகிழ்ந்திருக்கிறார்கள்.

முதல் டெஸ்ட்டில் மோசமாகத் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட்டில் வீறுகொண்டு எழுந்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஐந்தாவது பெரிய வெற்றியை நேற்று பதிவு செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மாவின் சதம், ரஹானே மற்றும் பன்ட்டின் அரை சதம், அஷ்வினின் 5 விக்கெட்டுகள் கைக்கொடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸில் கோலியின் அரை சதம் அஷ்வினின் சதம், அக்ஸர் பட்டேலின் 5 விக்கெட்டுகள், பன்ட்டின் அற்புதமான கேட்ச்சுகள் மற்றும் ஸ்டம்பிங்குகள் என ஆல்ரவுண்ட் பேக்கேஜாக அசத்தியிருக்கிறது இந்திய அணி.

இந்த வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

போட்டி முடிந்ததும் பேசிய கோலி, இரண்டாவது டெஸ்ட் வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு அர்ப்பணித்தார். இரண்டாவது டெஸ்ட்டில் ரசிகர்கள் உள்ளே வந்தது எங்களுக்கு உற்சாகம் தந்தது. ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒரு முறையும் பௌலர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு தேவைப்படும். ஆட்டத்தின் போக்கை மாற்றியதில் சென்னை ரசிகர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஒரு டீமாக இணைந்து விளையாட மக்கள் ஊக்கமளித்தார்கள். சென்னை ரசிகர்கள் அறிவாளிகள். கிரிக்கெட்டை நன்குப் புரிந்தவர்கள். பெளலர்கள் சிறப்பாகப் பந்துவீச அவர்கள்தான் தூண்டுகோலாக இருந்தார்கள்” என்று நெகிழ்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் தன்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழக வீரர் அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை விரும்பிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

**-ராஜ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share