தீப்பெட்டி தொழிற்சாலைகள் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி பகுதிகளில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்தப்பகுதியில், மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று முதல் பத்துநாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இத்தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் உள்ளனர்.
கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக லாரி வாடகை உயர்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டி தயாரிக்கத் தேவையான குச்சி, அட்டை, குளோரைட் மெழுகு, காகிதம் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலையும்கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீப்பெட்டி உற்பத்திக்கான செலவு 60 சதவீதம் அதிகரித்தாலும் அதற்கான விற்பனை விலை கிடைக்கவில்லை.
தீப்பெட்டி உற்பத்தி இருந்தாலும் அதற்கான விலை கிடைக்கவில்லை என்பதால் மார்ச் 22ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 10 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் விருதுநகா் மாவட்டத்தில் சாத்தூா், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறு மற்றும் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறியபோது, ”இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி,விருதுநகர், நெல்லை, தென்காசி, வேலூர், தா்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 400 தீப்பெட்டி தொழிற்சாலைகள், 3000 பேக்கேஜிங் யூனிட் என்று சொல்லப்படும் உறுப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் 10 நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன” என்றனர்.
-சக்தி பரமசிவன்
�,