2020ஆம் ஆண்டின், “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது” பெற நாடு முழுவதும் 121 காவல் துறை, அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இதில், நாடு முழுவதும் இடம் பெற்றுள்ள, 21 பெண் காவல் ஆய்வாளர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
**தமிழக அதிகாரிகளின் விவரம்**
ஜி.ஜான்சிராணி – ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி காவல் நிலைய ஆய்வாளர்.
கவிதா – புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
பொன்னம்மாள் – நீலகிரி மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்.
சந்திரகலா – அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
கலா – பெரம்பலூர், அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர்
வினோத்குமார் – சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர்.
**துணை முதல்வர் வாழ்த்து**
“நாட்டிலேயே சட்டம் ஒழுங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழக காவல் துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, குற்ற வழக்குகளைச் சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது” பெறுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய அளவில் விருது பெறும் 21 பெண் காவல் துறை ஆய்வாளர்களில் 5 பெண் அதிகாரிகள் தமிழக பெண் காவல் ஆய்வாளர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
மேலும் விருது பெறும் ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா மற்றும், டி.வினோத் குமார் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்தியப் புலனாய்வு நிறுவனத்தை (சிபிஐ) சேர்ந்த 15 அலுவலர்களுக்கும், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல் துறையைச் சேர்ந்த தலா 10 பேருக்கும், உத்தரப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கும், கேரளா மற்றும் மேற்கு வங்காள காவல் துறைகளைச் சேர்ந்த தலா 7 பேருக்கும், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,”