qசெம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி மூவர் பலி!

Published On:

| By Balaji

செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்க்க சென்ற மூவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்துார் அடுத்த புது வட்டாரம், திருவள்ளுவர் நகர், கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர், உஸ்மான்(39). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அப்சனா என்ற மகளும்(11) சுகில் என்ற மகனும் ( 7) உள்ளனர். மூன்று பேரும் நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது ஏரியின், ஆறாவது மதகு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அப்சனா தவறி, ஏரிக்குள் விழுந்தார். அவரை, காப்பாற்ற சுகிலும் ஏரிக்குள் குதித்துள்ளார். இருவரும் தண்ணீருக்குள் மூழ்கியதை பார்த்த தந்தை உஸ்மான், தண்ணீருக்குள் குதித்துள்ளார்.

மூன்று பேரும் தண்ணீருக்குள் மூழ்கியதைப் பார்த்த பொதுமக்கள் ஏரிக்குள் குதித்து உஸ்மானை மீட்டனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு இருவர் உடலையும் உயிரற்ற சடலமாக மீட்டெடுத்தனர். பிரேத பரிசோதனைக்காக குன்றத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share