தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியது. இதையடுத்து கன்னியாகுமரி முதல் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகமாகவே பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு பருவக்காற்று மேலும் வலுவடைந்திருப்பதால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை கொட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தை அடுத்த பில்லூர் அணை நிரம்பி வருகிறது. அங்கிருந்து 18000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
இதுப்பற்றி, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று (ஜூலை 11) கூறுகையில், “தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுவடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வால்பாறை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக, கோவை சின்னக்கல்லாரில் 17 செ.மீ., வால்பாறையில் 15 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில், இதர பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. இந்த மழையானது அடுத்த 2 நாட்களுக்கு தொடரும். ஜூன் 1 முதல் ஜூலை 11 வரை பதிவான மழையின் அளவு 86 மி.மீ., இயல்பான அளவு 68 மி.மீ., இதன் மூலம் 27 சதவீத கூடுதல் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.�,