அமெரிக்க அதிபர் டிரம்ப் அகமதாபாத் வருகைக்காக 12.5 கோடி ரூபாய்தான் செலவானதாகக் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்ற ’ஹவுடி மோடி’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியைப் போல் இந்தியாவிலும் ’நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சி அகமதாபாத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி நடந்த கிரிக்கெட் மைதானத்திற்கு அருகிலிருந்த குடிசைவாழ் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் வருகைக்காக கலை நிகழ்ச்சிகள், உச்சக்கட்ட பாதுகாப்பு, சாலை அமைத்தல் என தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் டிரம்பின் வருகைக்காக ரூபாய் 100 கோடி செலவானதாகக் காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா சட்டசபையில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அது போன்று தனது ட்விட்டர் பக்கத்திலும், 24 ஆம் தேதி அன்று அகமதாபாத்துக்கு வந்த அமெரிக்க அதிபரின் மூன்று மணி நேரச் சுற்றுப் பயணத்திற்காக அரசு 100 கோடி ரூபாய் செலவழித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, டிரம்ப் வருகைக்காக ரூபாய் 100 கோடி செலவானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுவது அடிப்படை ஆதாரமற்றது. குஜராத் அரசு சார்பில் ரூ.8 கோடியும், அகமதாபாத் மாநகராட்சி சார்பில் ரூ.4.5 கோடி என மொத்தம் 12.5 கோடி தான் செலவானதாகத் தெரிவித்துள்ளார்.
சாலை அமைக்கப்பட்டதெல்லாம், அகமதாபாத் மாநகராட்சியால் மக்களுக்காகப் போடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
**கவிபிரியா**�,