பெரம்பலூரில் மாட்டு கொட்டகை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர், புதிய மதனகோபாலபுரம், கம்பன் நகரை சேர்ந்த வைத்தியலிங்கம் பால் வியாபாரி ஆவர். இவருக்கு அவரது வீட்டின் அருகே சொந்தமாக உள்ள நிலத்தில் ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட பழமையான மாட்டு கொட்டகை ஒன்று உள்ளது. இதை கடையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக கொட்டகையின் ஒரு பகுதியில் மண்ணை நிரப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று(ஜனவரி 19) மாலையில் வைத்தியலிங்கத்தின் மனைவி ராமாயி, ராமாயின் தாய் பூவாயி(70), வைத்தியலிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள் மனைவி கற்பகம்(55) ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது யாருமே எதிர்பாராத விதமாக பலமில்லாத ஹலோபிளாக் சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் மூன்று பேரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர்,கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராமாயி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த கற்பகம், பூவாயி ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**-வினிதா**
�,