தமிழ்நாட்டில் இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெயை மானிய விலையில் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டு வருகிறது. அதுபோன்று சிலிண்டர் விலையும் 1000ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இந்த கடும் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், விவசாயிகளும், மீனவர்களும் கடும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு அரசு 2021 -22ஆம் ஆண்டு வெளியிட்ட வேளாண் துறை கொள்கையில், விவசாயத்துக்கு இயந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை தற்போது லிட்டருக்கு நூறு ரூபாய் அளவில் உள்ளதாகவும், ஏற்கனவே உற்பத்திச் செலவு அதிகரிப்பு, குறைந்த விலைக்கு விளைபொருட்கள் கொள்முதல் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்த போதும், அதன் மீது வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் உள்ளூர் செஸ் வரிகளை மாநில அரசு விதிப்பதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், பீகார் மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.கர்நாடகா மாநிலத்தில் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனால், தமிழ்நாட்டிலும் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப் போல, விவசாயிகளுக்கும் மானிய விலையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்கக் கோரி மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-வினிதா**
�,