தயாரிப்பாளர் எஸ்.தாணு அவர்களது திரையுலகப் பயணத்தைக் குறிப்பிடாமல் 90களுக்குப் பிறகான தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதிவிட முடியாது.
80களின் நட்சத்திர நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த்; 90களில் ஜொலித்த விஜய் – அஜித் – சூர்யா – விக்ரம்; இருபதாம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த தனுஷ் மற்றும் இப்போது திரையுலகின் எதிர்கால நட்சத்திரங்களாக ஜொலிக்கக் காத்திருக்கும் விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், அதர்வா எனப் பல தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களைத் தயாரித்த பெருமைக்குரியவர் தாணு. இந்தப் பெருமைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, ‘அசுரன்’ என்ற ஜனரஞ்சகமான சினிமாவை மக்களுக்குக் கொடுத்து அவர்களது சமூகத்தின் மீதான பார்வைகளை புரட்டிப்போட்டவரும் இவர்தான்.
அசுரன் திரைப்படத்தின் வெற்றியை முன்வைத்து, அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கக் காரணமாக அமைந்தவை எவை… அசுரன் திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்ன என்பன குறித்த கேள்விகளுடன் மின்னம்பலம் வாசகர்களுக்காக கலைப்புலி எஸ்.தாணு அவர்களைச் சந்தித்தோம். அப்போது தாணு அவர்களின் V கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்குப் படம் எடுத்துக் கொடுக்க, வெற்றி மாறனுக்குக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸை அவர் திரும்பக் கொடுக்க வந்தது குறித்து தாணு பேசினார்.
“திடீரென ஒருநாள் வெற்றி மாறன் வந்து, **வடசென்னை ஷூட்டிங் வேற தள்ளி போய்ட்டே இருக்கு. அதனால, குறிப்பிட்ட தேதியில உங்களுக்குப் படம் பண்ணித் தர முடியாம போச்சு. நீங்க கொடுத்த அட்வான்ஸ் பணத்துக்கு வட்டி போட்டு மொத்தமா குடுத்துடுறேன்** என்று சொன்னார். அதற்கு நான் **தம்பி எப்ப வேணும்னாலும் கொடு. ஆனால், படமா பண்ணிக்கொடு. அந்தப் பணத்தை நீயே வைத்துக்கொள்** என்று கூறிவிட்டேன். டெங்கு ஜுரம் வந்தபோதுகூட, ஓர் ஓரமாகப் படுத்துக்கொண்டு வேலையைப் பார்த்தவர் வெற்றி மாறன். அவர் ஒரு விளக்கொளி” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் தாணு.
தனுஷின் கலைத் திறமையைப் பற்றிக் குறிப்பிடும்போது “மலையாளத்தில் வெளியான மாமாங்கம் திரைப்படத்தைத் தமிழில் எடுக்க வேண்டும் என கேரளாவிலிருந்து சிலர் வந்து என்னைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் அசுரன் திரைப்படத்தில் தனுஷின் நடிப்பைப்பற்றி **அவர் அந்தப் படத்தில் நடிப்பதைப் பார்த்துவிட்டு, இனி இந்தியாவிலேயே இப்படியொரு நடிப்பை யாராலும் கொடுக்க முடியாது** என்று பாராட்டினார்கள். எங்க நடிகர் திலகம் இல்லாமல் போய்ட்டாரே; இருந்தா உச்சி முகர்ந்திருப்பாரே அந்தப் பிள்ளையை** என்று பேசினார்.
மேலும், **அசுரன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி ரியாக்ட் செய்த விதம்**, **அசுரன் கதையமைப்பைப் பற்றி ரஜினி கூறியது** உள்ளிட்ட பல தகவல்களை தாணு பகிர்ந்துகொண்டார். அந்த முழு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.