சென்னை மாநகர பஸ்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், ஒரு சில இடங்களில் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே நடைபெறும் வாக்குவாதத்தில் தவறு செய்பவர்களை கண்டறியவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக பஸ்களில் அபாய பொத்தான்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 25 பணிமனைகள் மூலம் 696 வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்து 300 பஸ்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் 42 லட்சம் பயணிகளுக்கு சேவை அளிக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பெண்களின் நலன் கருதி அவர்கள் அதிகம் பயணிக்கும் பகுதிகளை இணைக்கும் வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் விரைவில் மாநகரில் இயக்கப்படும் மீதம் உள்ள 2 ஆயிரத்து 800 பஸ்களிலும் விரிவுபடுத்தப்படும். பஸ்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பயணிகள் அபாய பொத்தானை ஒரு முறை அழுத்தியதும், பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
எந்த பஸ்சில் இருந்து அழைப்பு பெறப்பட்டதோ, அந்த பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் நேரலை காட்சிகளை தலைமையகத்தில் உள்ள குழுவினர் பார்த்து, உடனடியாக காவல்துறை உதவி எண்ணுக்கு புகார் அளிப்பார்கள். இதன் மூலம் ஆபத்தில் சிக்கிய பஸ் நிற்கும் இடத்திற்கு அருகிலுள்ள ரோந்து வாகனம் எந்த நேரத்திலும் அந்த இடத்தை அடைந்து அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும். தற்போதைய முறைப்படி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதால் குற்றவாளிகள் தப்ப முடியாது. பெண்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, கண்டக்டர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே ஏற்படும் மோதலில் தவறு செய்பவர்களை கண்டறியவும் புதிய கருவி உதவும். அபாய பொத்தான்கள் குறித்து பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்கவும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.