பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இந்த பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த சுகாதார நிலையம் மிகவும் சேதம் அடைந்து இருந்ததால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டப்பட்டு சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.
இங்கு லப்பைக்குடிக்காடு, பெண்ணகோணம், கீழக்குடிக்காடு, கழனிவாசல், ஆடுதுறை உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை மற்றும் காற்றால் பழைய கட்டடத்தின் முன்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட்டால் அமைக்கப்பட்டிருந்த தகடுகள் காற்றில் சரிந்து விழுந்தன. மேலும் கட்டடங்கள் முழுவதும் செடிகள் முளைத்து சுவர்கள் பலவீனமாக உள்ளது. எந்த நேரத்திலும் கட்டடம் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
**-ராஜ்**