கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாயம் இருப்பதால் அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பரவலின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூன்றாம் அலையும் வரும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அதனால், மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசும் வலியுறுத்துகிறது.
இந்நிலையில் நேற்று(ஜூலை 16) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்,” தற்போது கொரோனா பரவலின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், இது மூன்றாம் அலைக்கான எச்சரிக்கையாகும். எனினும், தற்போது கொரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையின்படி, இந்த உலகம் மூன்றாவது அலையை நோக்கி நடைபோட்டு வருகிறது. மூன்றாவது அலை வந்தால் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் வைரஸால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். அதிக பாதிப்புக்கு ஆளாகக் கூடிய 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 100-125 நாட்கள் மிகவும் முக்கியமானவை. அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போது இருக்கிற சூழ்நிலையை விட மோசமடையக்கூடும். ஆனால், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால், மூன்றாவது அலையை நாம் சமாளிக்கலாம். மூன்று, நான்கு மாதங்களில் தடுப்பூசி இயக்கத்தை அதிகரித்தால், அடுத்து நாம் பாதுகாப்பான சூழ்நிலைக்கு வந்துவிடுவோம்.
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. 73 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.
நம்மை சுற்றி இன்னும் கொரோனா இருந்துகொண்டுதான் இருக்கிறது. கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி கொண்டுதான் இருக்கிறோம். ஊரடங்கில் தளர்வுகளை நோக்கி போகும்போது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் கைக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம்” என்று கூறினார்.
**-வினிதா**
�,