திமுக இளைஞர் அணித் தலைவர் உதய நிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் தலையைத் துண்டித்து சென்ற இளைஞரை, போலீஸார் என்கவுன்ட்டர் செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பாகியுள்ளது.
கடலூர் – திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம் பகுதியில் வசிக்கும் வீரா என்ற ரவுடி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவராக இருந்துவருகிறார், 2015இல் சதீஷ் என்ற இளைஞரை வீரா வெட்டிக் கொலை செய்தார். வீராவுக்கு கடலூர் முக்கிய தொழில் அதிபர் ஒருவர் உரம் போட்டுவந்தார், இதனால் வீரா பெரிய ரவுடிகள் டீமுடன் செல்வாக்காக வலம் வந்துகொண்டிருந்தார்.
சதீஷின் நண்பர்களில் சிலரை சமீபத்தில் பார்த்த வீரா, “ உங்கள் தலையை ஒரு நாளைக்கு எடுக்கப்போகிறேன்” என்று மிரட்டியுள்ளார். தகவல் கேள்விப்பட்ட சதீஷின் நண்பர்களான விக்கி என்ற விக்னேஷ்வரன் அவரது மச்சான் கிருஷ்ணா இருவரும் சேர்ந்து வீராவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். .
விக்கிக்கு கஞ்சா பழக்கம் உண்டு. ஆள் சேர்த்து எட்டுபேர் கொண்ட குழுவுடன் நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி, இரவு வீரா வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரா அவரது வீட்டிலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் உள்ள வீதியில் புல்லட்டை நிறுத்தி அதன் மீது உட்கார்ந்திருக்கிறார். கண் இமைக்கும் நேரத்தில் விக்கி ஆட்கள் வீரா தலையில் கட்டையால் அடித்ததும் மயங்கிப்போய் கீழே சரிந்துவிடுகிறார், உடனே கிருஷ்ணா என்றவன் வீரா தலையை அறுத்து எடுக்க, அதைக் கையில் எடுத்துப்போய் சதீஷ் வீட்டு வாசலில் போட்டுவிட்டுத் தப்பித்து விடுகிறார்கள்.
சம்பவம் நடந்த 15 நிமிடங்களில் போலீசுக்கு தகவல் தெரிந்ததும் எஸ்.பி.அபினவ் அனைத்து இன்ஸ்பெக்டர்களையும் அலர்ட் செய்தார். அந்த கொலைக் கும்பலின் செல்போன்கள் லொக்கேஷன் கண்டறிந்து, மைக்கில் இஞ்ச் பை இஞ்சாக தகவல்களை தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒருகட்டத்தில் சிங்கம் பாணியில், சைபர் கிரைம் டீம், அந்தக் கும்பல் , மேல் பட்டாம்பாக்கம் வழியாக பண்ருட்டி புதுப்பேட்டை வழியாகச் செல்கிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொன்னது. அனைத்து போலீஸாரும் வீதிக்கு வந்து வாகன சோதனையில் தீவிரம் காட்டினார்கள், அவர்களுக்குப் பின்னால் எஸ்.பி.தனிப்படையையும் சென்றது.
புதுப்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் தீபன் வாகன சோதனையிலிருந்தபோது ஒரு பைக் வேகமாகப் பறக்க அந்த பைக்கை விரட்டி சென்று விழுப்புரம் மாவட்டம் பார்டரில் வளைத்துப் பிடித்தார், அதன் பிறகு ஒன் பை ஒன்னாக குற்றவாளிகளைப் பிடித்தனர் போலீஸார்.
பிடிபட்டவர்களிடம் விசாரணை செய்தபோது வீரா தலையைத் துண்டித்தது கிருஷ்ணா என்பது தெரியவந்ததும், எஸ்.பி.அபினவ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசரமாக ஸ்பாட்டுக்கு சென்ற எஸ்.பி பிடிபட்டவர்களிடம் விசாரனை செய்கிறார்.
உடனே கிருஷ்ணாவைச் சிறப்பு விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்போது அவர் தப்பித்து ஓட முயன்றபோது எஸ்.ஐ.தீபன் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டதால் சம்பவ இடத்திலேயே குருவிபோல் சுருண்டு விழுந்தார் கிருஷ்ணா.
எஸ்.ஐ.தீபன் சென்னையிலிருந்தபோது வல்லரசு என்ற ரவுடியை என்கவுண்ட்டர் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
மனிதாபிமானம் இல்லாமல் கொடூரமாகக் கொலை செய்வதற்கு கஞ்சா போதையும் முக்கிய காரணம் என்கிறார்கள் போலீஸார். கடலூர் மாவட்டத்தில் குக் கிராமங்கள் முதல் நகரம் வரையில் பரவியுள்ளது கஞ்சா வாடை.
**-வணங்காமுடி**�,