கடந்த இரண்டு மாதங்களில் பனிப்பொழிவால் தேயிலைத்தூள் உற்பத்தி 22 சதவிகிதம் குறைந்துள்ளதாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளர்களும் உள்ளனர். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நீலகிரியில் பனிப்பொழிவு காணப்படும். அப்போது பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிறது. அதன்படி இந்த ஆண்டும் பனிப்பொழிவால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலைத்தூள் உற்பத்தி குறைந்து விட்டது.
இதுகுறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர், “கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் நீலகிரி தேயிலைத்தூள் உற்பத்தி கடந்த ஆண்டைவிட 22 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த மாதங்களில் 15 லட்சம் கிலோ தேயிலைத்தூள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 19 லட்சத்து 2 கிலோ தேயிலைத்தூள் உற்பத்தியாகி இருந்தது. இதை ஒப்பிடும்போது 3 லட்சத்து 98 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி குறைந்துள்ளது. இது 22 சதவிகித உற்பத்தி குறைவு ஆகும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, அரவேணு, கீழ் கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் கடும் பனி பொழிவு இருந்தது. மேலும் தாமதமாக நிலவிய உறைபனி தாக்கம் காரணமாக பச்சை தேயிலை மகசூல் கடுமையாக பாதித்ததால் தேயிலைத்தூள் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த மாதத்தில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் கடும் பனிப்பொழிவில் தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இன்னும் அதிக மழை தேவைப்படும். அப்போதுதான் எதிர்வரும் மாதங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து, உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளின் அளவு அதிகரிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
�,