ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு எளிதில் மக்கும் தன்மை கிடையாது. ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்கு பல ஆண்டுகளாகும். பிளாஸ்டிக் நமது சுற்றுச்சூழல், மண் திறன் அமைப்பு, மண் வளர்ச்சி ஆகியவற்றுக்கு பெரும் கேடு விளைவித்து வருகிறது. பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது.
இன்று நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் காய்கறி கடைகள், பால் பாக்கெட், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், தேநீர் கடைகள், வாகன பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இந்தியாவிலேயே முதன் முதலாக இமாச்சலப் பிரதேசம் கடந்த 2009ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தன. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலமும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை வருகிற ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் தடை செய்வதாக மத்திய அரசும், இந்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
.