சேலம் மாவட்டம், கெங்கவல்லி சமத்துவபுரப் பராமரிப்பு பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் பழுதாகி உள்ளன. இதையடுத்து அந்த வீடுகளை பராமரிக்க கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 52 வீடுகளை பராமரிக்க தலா ரூ.1 லட்சமும் மீதமுள்ள 48 வீடுகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்ளவும், சாலை மற்றும் பூங்காக்களை சீரமைக்க ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் நடுவலூர் சமத்துவபுரத்துக்கு வந்தனர். அப்போது ஒரே அளவிலான மதிப்பீட்டில் அனைத்து வீடுகளையும் முறையாக பராமரித்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பணியைத் தொடங்க சமத்துவபுரம் பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் வெங்கடேசன் மற்றும் கெங்கவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸாரும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்து ஒரே மாதிரியான வேலைகளை செய்ய வேண்டும், அதற்குரிய நிதியை ஒதுக்கி தருமாறு அந்தப் பகுதி மக்கள் கேட்டு கொண்டனர். இதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்பு எந்த ஒரு வேலையையும் செய்யாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
**-ராஜ்**
.