மூன்றாம் உலகப் போரில் பிரிட்டன் அழிக்கப்படும் - முன்னாள் ராணுவ தளபதி

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரானது 120 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மூன்றாம் உலகப் போர் வந்தால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது நிச்சயம் என்று ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டனில் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள சர் பேட்ரிக் சாண்டர்ஸ், 3ஆம் உலகப் போரில் ரஷ்யாவைத் தோற்கடிக்க தயாராக வேண்டும் என்று ராணுவ படையினரிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓய்வு பெற்ற ராணுவ தளபதி, ரஷ்ய அதிபர் புதினின் ஆதரவாளருமான ஈவ்ஜெனி, மூன்றாம் உலகப் போரின் விளைவாக பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து சில பொருட்களின் போக்குவரத்தை தடை செய்தது. இதுகுறித்து கலினின்கிராட் கவர்னர் அன்டன் அலிகானோவ் கூறுகையில், "ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஒப்பந்தங்களை மீறுகிறது. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது." என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை கூறுகையில், "உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை அதிபர் புதின் நிராகரிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். உலகப் போர் என்ற ஒரு நிலை வந்தால் பிரிட்டனும் முழுமையாக அழிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று எச்சரிக்கை விடுத்தார்.