மீன் பிடிக்க ஏரி உடைப்பு: 300 ஏக்கர் விளைநிலங்கள் சேதம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மதகை உடைத்ததால் தண்ணீர் வெளியேறி 300 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய மருதாடு ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏரியில் மீன் பிடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் நேற்று (மே 28) இரவு ஏரியின் மதகை உடைத்து உள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறி கடைசி குளம் கிராமப் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் கூறினர். இதையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியின் மதகு உடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை வெளியே வராத அளவுக்கு சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரி மதகை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ராஜ்