ுவையும் மணமும் மிகுந்த செட்டிநாடு உணவுகளில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் உண்டு. அதோடு, உணவு வகைகளின் பெயர்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. நீர்க்க இல்லாமல் கெட்டியாக வைக்கப்படும் இந்த வேர்க்கடலை குழம்பை செட்டிநாடு பகுதிகளில் கெட்டிக்குழம்பு என்பார்கள். இதில் காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். அதனால் சாதத்தில் கொஞ்சமாக சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
**என்ன தேவை?**
வேர்க்கடலை – அரை கப்
சின்ன வெங்காயம் – அரை கப்
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்)
சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன்
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்)
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
**அரைக்க…**
தேங்காய்ப்பல் – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
முந்திரி – 10
**தாளிக்க…**
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
பச்சை வேர்க்கடலையை 8 மணி முதல் 10 மணி நேரம் ஊற வைக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தைத் தோல் நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருட்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த வேர்க்கடலை மற்றும் புளிக்கரைசல் ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரும் குழம்பைக் கொதிக்கவைக்கவும். அரைத்த விழுது, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
**குறிப்பு**
வேர்க்கடலைக்கு மாற்றாக கொண்டைக்கடலை, மொச்சையைப் பயன்படுத்தியும் இந்தக் குழம்பு செய்யலாம்.
**[பருமனைக் குறைக்க உதவுமா டயட் உணவுகள்?](https://www.minnambalam.com/public/2022/05/15/3/diet-habits-to-reduce-obesity)**
.