இடிந்து விழுந்த அரசுப் பள்ளி மேற்கூரை: அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்!


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தபோது மாணவர்கள் மரத்தடியில் படித்ததால் உயிர் தப்பியுள்ளனர். இதில்ஆசிரியர் ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள ஆனைசேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆனைசேரி, நீர்க்கோழியனேந்தல், கீழக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 32 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டடம் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது.
அதன் பிறகு ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதால் கடந்த ஐந்தாண்டுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. இருப்பினும் பள்ளி கட்டடம் ஆங்காங்கே சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள் நலன் கருதி மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 13) பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் தளத்தின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. நல்லவேளையாக அப்போது வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால் உயிர் தப்பினர். ஆனால், இதில் ஒரு ஆசிரியர் மீது காரை விழுந்து காயம் அடைந்தார். உடனே அவரை சக பள்ளி ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர். அப்போது பேசிய அவர்கள், “கட்டட மேற்கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தபோது மாணவர்கள் வெளியே மரத்தடியில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். இதனால் மாணவர்கள் காயமின்றி தப்பினர். ஏற்கனவே புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் கட்டடம் சீரமைத்த பின்னரும் காரை பெயர்ந்து விழுந்ததால் புதிதாக ஒரு பள்ளி கட்டடத்தை அமைக்க வேண்டும். பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
-ராஜ்-