கிச்சன் கீர்த்தனா: கீரை ஆலு சன்னா!


பள்ளி நாட்களில் உணவு கொடுத்து அனுப்பினால் நண்பர்களுடன் சேர்ந்தோ, ஆசிரியரின் கண்டிப்பினாலோ சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால், விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது குழந்தைகளைச் சாப்பிட வைப்பது மிகவும் சிரமமான காரியம். பள்ளி செல்லும் குழந்தைகளில் பலர் காலை நேர உணவை அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். அவர்களை ரசிக்க வைத்து ருசிக்க செய்ய இந்த ஹெல்த்தியான கீரை ஆலு சன்னா பெஸ்ட் சாய்ஸ்.
என்ன தேவை?
சுக்காங்கீரை / பாலக்கீரை / நாட்டுப்பசலைக்கீரை / சிறுகீரை ஏதேனும் ஒன்று - அரை கட்டு
வெள்ளைக் கொண்டைக்கடலை - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 2
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
வெள்ளைக் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 4 - 5 விசில் வரும் வரையில் வேகவைத்து வடிக்கவும். உருளைக்கிழங்கைத் தனியாக வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, சீரகத்தைத் தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பின்னர் தக்காளி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கொண்டைக்கடலை, கீரை, உருளைக்கிழங்கு சேர்த்துப் புரட்டி, தேங்காய்ப்பால் ஊற்றி, ஒரு கொதிவந்ததும், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்தி / இடியாப்பம் / ஆப்பம் உடன் சூடாகப் பரிமாறவும்.