ஈரோடு: காலாவதியான மருந்து மாத்திரை பெட்டிகளால் பரபரப்பு!


ஈரோடு சாஸ்திரி நகர் அருகே காலாவதியான மருந்து மாத்திரைகள் பெட்டி பெட்டியாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சாஸ்திரி நகர் அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பை கொட்டுவதற்காக அங்கு ரோட்டோரம் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி பணியாளர்கள் இங்கு தினந்தோறும் குப்பைகளை வாங்கிச் செல்வதால் அந்த இடத்தில் யாரும் குப்பைகள் கொட்டுவதில்லை.
இந்த நிலையில் நேற்று (மே 12) காலை அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது, அங்கு ரோட்டோரம் குப்பை கொட்டும் இடத்தில் ஏராளமான மருந்து, மாத்திரைகள், ஊசிகள் என பெட்டி, பெட்டியாக கிடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இதுபற்றி ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் காலாவதியானவை என்பதும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாதபோது மர்ம நபர்கள் இங்கு வீசி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பொது இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது சட்டப்படி குற்றமாகும். காலாவதியான மருந்து மாத்திரைகளை வீசி சென்ற மர்ம நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
-ராஜ்-