சூறைக்காற்றால் வீடுகளை இழந்து தவிக்கும் இருளர்கள்!

தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே சூறைக்காற்றால் வீடுகளை இழந்து தவிக்கும் இருளர் இன மக்களுக்கு உடனே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே சாமனூர் ஊராட்சி இந்திரா நகரில், ஐம்பதுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் சிலர் ரேஷன் கார்டு, சாதி சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாமல் புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் மண் வீடு கட்டி மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அட்டைகள் போர்த்தி, சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருளில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மண் வீட்டின் மேல் போர்த்தி இருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்து சேதமானது. இதனால் இவர்கள் இரவு முழுவதும் குழந்தைகளுடன் இருளிலும், மழையிலும் தவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி வீடுகளை இழந்து தவிக்கும் இந்த இருளர் இன மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜ்-