டந்த மாத தொடக்கத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விலை 5 மடங்குக்கு மேல் அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் பேசுகையில், “கோயம்பேடு சந்தைக்கு தினசரி 70 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம் ஆனால் கடந்த மாத தொடக்கத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த திடீர் கோடை மழை காரணமாக அங்கு நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வரை அங்குள்ள வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தான் தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் 110 ரூபாய்க்கு விற்ற 14 கிலோ அடங்கிய ஒரு பெட்டி தக்காளி இன்று 550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. வரத்து அதிகரித்தால் மட்டுமே தக்காளி விலை குறையும்.” என்று அவர் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து நேற்று 48 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
.