கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்கீரை பட்டர் நான்

கடைகளில் பச்சைப் பசேல் என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கீரைக் கட்டுகளின் அழகே கண்ணைக் கவரும். தோற்றத்தில் மட்டுமல்லாமல் சத்து நிறைந்தது என்ற வகையிலும் கீரை சிறப்புமிக்கது. கீரையை வழக்கமான முறையில் செய்து பரிமாறும்போது, சிறியவர்கள் பலரும், பெரியவர்கள் சிலரும் பேருக்குக் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டோ, சாப்பிடாமலோ 'எஸ்கேப்’ ஆகிவிடுவார்கள். இவர்களை கீரை சாப்பிட வைக்க, சத்தான இந்த வெந்தயக்கீரை பட்டர் நான் உதவும்.
என்ன தேவை?
மைதா - 2 கப்
கோதுமை மாவு - ஒரு கப்
வெந்தயக்கீரை - 2 சிறிய கட்டு
வெதுவெதுப்பான நீர் - ஒரு கப்
ஈஸ்ட் - முக்கால் டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - கால் கப்
உப்பு - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கீரையை அலசி இலைகளை நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய கீரையைப் போட்டு, நீர் வற்றும் வரையில் நிதானமான தீயில் நன்கு வதக்க வேண்டும். இல்லையெனில் நான் கசப்பாக மாறிவிடும். வதக்கிய கீரையை ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இதனுடன் கீரையைச் சேர்த்துப் பிசிறிவிடவும். வெதுவெதுப்பான நீரில், ஈஸ்ட்டைப் போட்டு, 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். அது நன்றாக நுரைத்து வந்தவுடன், மாவுடன் சேர்த்துப் பிசையவும். தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இதை மூடிப் போட்டு ஒரு மணி நேரம் (இருமடங்காக ஆகும் வரையில்) வைத்திருக்கவும். ஒரு நான்-ஸ்டிக் தவாவை மிதமான சூடாகும் வரையில் காயவைக்கவும். மாவை உருண்டைகளாக உருட்டி, சற்று தடிமனான சப்பாத்திகளாகத் தேய்க்கவும். மேலே சிறிதளவு தண்ணீர் தடவவும். தண்ணீர் இருக்கும் பக்கம் கீழே இருக்கும்படி போடவும். தீயை மிதமாக்கிக்கொள்ளவும். ஒருபக்கம் வெந்ததும், தவாவையே திருப்பி, நானின் மறுபக்கத்தைக் காட்டி சுடவும். கவனமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் வெண்ணெயைத் தடவி, சூடாகப் பரிமாறவும்.
சம்மர் ஸ்பெஷல் - கோடையில் அசைவம் சாப்பிடுவது நல்லதா?
.