நாடு முழுவதும் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்!

விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பதிலும், அவர்கள் தொடர்பான அரசின் இலக்கை நிறைவேற்றுவதிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று ஒன்றிய ராஜாங்க அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய விவசாயிகளை மீளாக்கடன்களில் இருந்தும் தற்கொலைகளில் இருந்தும் குன்றிவரும் வளங்களில் இருந்தும் மீட்டு அவர்கள் வாழ்வில் செழிப்பும், சந்தையில் அவர்களுக்கான இடத்தை அமைத்தும், நிலைத்தன்மையை உருவாக்குவதே உழவன் உற்பத்தியாளர்கள் அமைப்பின் நோக்கமாகும்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடர்பான மண்டல மாநாடு நடைபெற்றது. அதில் ஒன்றிய வேளாண்மைத் துறை ராஜாங்க அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பங்கேற்று பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, சுவாமிநாதன் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளுக்கு போதுமான நிதி ஆதரவு கிடைக்க வேண்டும், விவசாயச் செலவு குறைக்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு தரமான விதைகளும், நல்ல சந்தை விலையும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
கடந்த 2013ஆம் ஆண்டில் விவசாயத்துக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு 23 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.1.32 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பதிலும், அவர்கள் தொடர்பான அரசின் இலக்கை நிறைவேற்றுவதிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
எனவே, நாடு முழுவதும் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ரூ.1 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-ராஜ்-