திருப்பதி: ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறப்பு!

திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர், "புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. வருகிற 5ஆம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3.60 கோடி ரூபாயில் தங்க சிம்மாசனம் தயார் செய்யப்படும். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரண்டு நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும்" என்று கூறினார்.
மேலும், "அரசு வழங்கிய நிலத்தின் மதிப்பு 500 கோடி ரூபாயாகும். அங்கு ரேமண்ட்ஸ் நிறுவனத் தலைவர் கவுதம் சிங்கானியா கோயில் கட்ட முன்வந்துள்ளார். திருப்பதியில் 20 கோடி ரூபாயில் பத்மாவதி மருத்துவக் கல்லூரி கட்டப்படும். சீனிவாச சேது பாலத்தின் முதல்கட்ட பணிகள் முடிந்துள்ளன. அந்த பாலத்தை 5ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதையடுத்து இரண்டாவது கட்டமாக பாலம் கட்டும் பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணி வருகிற 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
நிபுணர்களின் பரிந்துரைப்படி திருப்பதி மலைப்பாதையை பலப்படுத்த இரண்டாவது கட்டமாக 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதிகளைச் சீரமைக்க 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. திருமலை பாலாஜி நகரில் 2.86 ஏக்கரில் மின்சார பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.