வெங்காயம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கண்ணீர்!

திண்டுக்கல்லில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10-க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் வெங்காய தரகு மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த வெங்காயத்தைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வெங்காய மார்க்கெட் செயல்படும். உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் சராசரியாக 12 டன் வெங்காயம் விற்பனைக்காக மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது.
இவை கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெங்காய மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக வெங்காயம் அதிக அளவில் வரத்தானது. இதனால் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் வியாபாரிகளும் கூடுதல் விலை கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படவில்லை. அதேநேரம் மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகரித்ததால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.60 வரை விற்பனை ஆன ஒரு கிலோ வெங்காயம், அவற்றின் தரத்தைப் பொறுத்து ரூ.10 முதல் ரூ.20 வரையே தற்போது விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சியால், அதை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
"அறுவடைக்கு செலவிடும் தொகை கூட எங்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால் அறுவடை செய்யாமல் வயல்களிலேயே அப்படியே விட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள திண்டுக்கல் வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத் துணை செயலாளர் மாரிமுத்து, "ஜனவரி, பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்தது. உள்ளூரில் வெங்காய விளைச்சல் அதிகமானதால் தற்போது மார்க்கெட்டில் வெங்காய வரத்து அதிகரித்தது. ஆனால் வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி முழுமையாகத் தடைபட்டது. இதன் காரணமாகவே அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. விரைவில் நிலைமை சரியாகும்" என்று கூறியுள்ளார்.
-ராஜ்-