நேரடி விற்பனை: இரண்டு வாரங்களில் 30 டன் காய்கறிகள்!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வியாபாரிகளை நேரடியாக சந்தித்து காய்கறிகளைக் கொடுப்பதால் இரண்டு வாரங்களில் 30 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர் வட்டாரத்தில் 500 ஏக்கரில் பாகற்காய், தட்டைப்பயிறு, மேரக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இதை கேரளா மற்றும் கூடலூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு கூடலூர் பகுதியில் பாடந்தொறை, புத்தூர் வயல், மண்வயல், புளியம்பாறை விவசாயிகளை ஒருங்கிணைத்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலமாக முதுமலை உழவர் உற்பத்தியாளர் குழு 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தக் குழுவினர் கூடலூர் பகுதியில் உள்ள விவசாயிகளை கோவை, பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை நேரடியாக சந்திக்க வைத்தனர்.
பின்னர் அவர்களுக்கு விளைபொருட்களை சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதை தொடர்ந்து தினமும் 2 முதல் 3 டன் காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள வேளாண் விற்பனை பிரிவு அதிகாரிகள், "கூடலூர் பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு போதியவிலை கிடைக்கவில்லை என விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தது. இதையடுத்து விவசாய குழு ஒருங்கிணைக்கப்பட்டது. தாங்கள் விளைவித்த காய்கறிகளை விவசாயிகள் ஒன்றிணைந்து கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் நேரடியாக விற்று வருகிறார்கள்.
இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களில் 30 டன் காய்கறிகள் வெளி மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.
-ராஜ்-