இந்தியாவில் தற்பொழுது எல்லாவற்றிலும் விலை உயர்வு என்பது பரவலான பிரச்சினையாகிவிட்டது. விலை உயர்வு, வரி உயர்வை எல்லாம் பார்க்கும்போது, நமது பொருளாதாரம் மிக பெரிய வீழ்ச்சியை சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் வருகிறது. இந்நிலையில், பஞ்சு விலை உயர்வால் வங்கதேசம், வியட்நாம், கம்போடியா நிறுவனங்களுடன் போட்டியிட்டு, ஆர்டர்களை கைப்பற்ற முடியாமல் நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தவிக்கின்றனர்.
தமிழக நூற்பாலைகள், பின்னலாடை நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த 18 மாதங்களில் கிலோவுக்கு 169 ரூபாய் நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நூல் விலை மட்டுமின்றி நிட்டிங், டையிங், பிரிண்டிங் என அனைத்து வகை ஜாப் ஒர்க் கட்டணங்கள், இதர மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களின் பின்னலாடை தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், “பஞ்சு விலை கேண்டி(356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை எட்டிப்பிடிக்க உள்ளது. கடந்த, 18 மாதங்களாக ஒசைரி நூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் வர்த்தக போட்டிகள் கடுமையாகியுள்ளன. ஆடைக்கு தொடர்ச்சியாக விலை உயர்வு அளிக்க வர்த்தகர்கள் மறுக்கின்றனர். போட்டி நாடுகளை விட, நமது பின்னலாடை ரகங்களின் விலை ஆடை ஒன்றுக்கு ரூ.75 முதல் 112 வரை அதிகரித்துள்ளது.” என்றார்.
மேலும், “இதனால் ஏராளமான வெளிநாட்டு ஆர்டர்கள், வர்த்தக விசாரணையுடன் நின்று போய், நமது போட்டி நாடுகளை நோக்கி செல்கின்றன. கடந்த 2021-22ம் நிதியாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 38 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருக்க வேண்டும். நூல் விலை, ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட காரணிகளால் ரூ.33 ஆயிரத்து 525 கோடி வர்த்தகத்தையே எட்ட முடிந்தது. அதாவது கடந்த நிதியாண்டில் மட்டும் திருப்பூர் ரூ. 4,500 கோடி மதிப்பிலான ஏற்றுமதியை இழந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
.