நூல் விலை உயர்வு: பெட்ஷீட் உற்பத்தி நிறுத்தம்!


நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 7ஆம் தேதி பெட்ஷீட் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்துவதாக ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் தறி ஓட்டுதல், பாவு ஓட்டுதல், பாவு பிணைத்தல், நூல் போடுதல் உள்ளிட்ட தொழில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். விசைத்தறி தொழிலுக்கு பயன்படும் நூலின் விலை அடிக்கடி உயர்ந்து வந்ததால் விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.10 வரை நூலின் விலை அதிகரித்ததால் உற்பத்தி செய்யும் ரகங்களுக்கு ஆகும் செலவுகளுக்கு ஏற்ப பெட்ஷீட் ரகங்களை விற்பனை செய்ய முடிவதில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 7ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக பெட்ஷீட் உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ராஜ்-