சரியாக இயக்கப்படாத அரசு பஸ்: 15 கி.மீ நடந்து செல்லும் மாணவர்கள்!


புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பஸ் சரியாக இயக்கப்படாததால் மழையூர் மேல்நிலைப் பள்ளிக்கு 15 கி.மீ. தூரம் மாணவர்கள் நடந்தே வந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க தினமும் பஸ்ஸை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1,800 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் அருகில் உள்ள அதிரான்விடுதி, வெள்ளாளவிடுதி, மோளுடயான்பட்டி, மீனம்பட்டி, கருப்பட்டிபட்டி, சொக்கநாதபுரம், கணபதிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்தக் கிராமங்களில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர புதுக்கோட்டையில் இருந்து மழையூர் அதிரான்விடுதி வழியாக கணபதிபுரம் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு அரசு பஸ் சரியாக இயக்கப்படுவது இல்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வந்து செல்கிறது. வேறு மாற்று பஸ்களும் இல்லாததால் மாணவ-மாணவிகள் தினமும் 15 கி.மீ தூரம் நடந்தே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
"பொதுத்தேர்வு நெருங்கிவரும் நிலையில் தினமும் காலை மாலை இரண்டு மணி நேரம் நடந்து செல்வது மாணவர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையும் உள்ளது.
மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி புதுக்கோட்டை - கணபதிபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்ஸைத் தடையின்றி தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜ்