வனவிலங்குகளின் தாகம் : தண்ணீர் திறப்பு!

முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சியால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகள் வறண்டு விட்டன. புல்வெளிகள் காய்ந்ததுடன், செடிகள், கொடிகளும் கருகிவிட்டன. இதனால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
எனவே, இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மின்வாரியத்துக்குக் கடிதம் எழுதினார்கள். இதையடுத்து நேற்று காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்தத் தண்ணீர் இரண்டு மதகுகள் வழியாக வெளியேறியது. அந்தத் தண்ணீர் கால்வாய் வழியாக சோலூர், கல்லட்டி நீர்வீழ்ச்சி, வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம், சீகூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் சீராக செல்கிறதா, ஏதேனும் அடைப்பு உள்ளதா என்று வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அடர்ந்த வனப்பகுதி நடுவே செல்வதால் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள், இந்த கால்வாயில் செல்லும் தண்ணீரை குடித்து தாகம் தணித்து வருகின்றன. குறிப்பாக சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் வாழும் வனவிலங்குகளின் தாகம் தீர்ந்துள்ளது. அங்கு பகலில் வெயில் அதிகமாக இருப்பதால், கால்வாயில் செல்லும் தண்ணீரில் சிறிது நேரம் வனவிலங்குகள் படுத்து ஓய்வு எடுக்கின்றன.
-ராஜ்