கிச்சன் கீர்த்தனா: செட்டிநாட்டு தக்காளி சூப்!


தக்காளியை சூப் செய்து குடிப்பதன்மூலம் இருமல், சளித்தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம். பழுத்த தக்காளி ஒன்றுடன் நான்கைந்து பூண்டுப் பற்களைச்சேர்த்து நசுக்கி கொதிக்க வைத்து உப்பு சேர்த்தால் சூப் தயார். பூண்டு பிடிக்காதவர்கள் மிளகு, சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவையுடனும் சூப்பைத் தயார் செய்யலாம். எப்படிச் செய்தாலும் இதன் சூப்பினை இருமல், சளித்தொந்தரவு ஏற்பட்டதும் அருந்தினால் பலன் கிடைக்கும்.
என்ன தேவை?
தக்காளி - 4
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று
பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
அரிசி களைந்த தண்ணீர் - ஒரு கப்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு
கிராம்பு - 2
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித்தழை, உப்பு – தேவைக்கு
எப்படிச் செய்வது?
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும் பாசிப்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி அரிசி கழுவிய தண்ணீர், பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.
குறிப்பு
இதைச் சூப்பாக தனியாகவும் எடுத்துக் கொள்ளலாம். சாதத்தோடு கலந்தும் சாப்பிடலாம்.