ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, கம்பளி, போர்வை, தலையணை போன்றவை வழங்கப்படும். இதற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நிலையில் கொரோனா முதல் அலை பரவத் தொடங்கிய காலத்தில், அதாவது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயணிகளுக்கு போர்வை, கம்பளி வழங்கப்படாது. அதனால் பயணிகள் தங்களுக்கான போர்வைகளை தாங்களே வீட்டிலிருந்து கொண்டு வரவேண்டும் என்று ரயில்வே துறை அறிவித்தது.
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், ஊரடங்கில் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோர்களுக்கு மீண்டும் கம்பளி, போர்வைகளை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் இன்று(மார்ச் 10) பிறப்பித்த உத்தரவில், “கொரோனா தொற்று காரணமாக ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளி, போர்வை வழங்கப்படாது என்ற உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. மேலும், பயணிகளுக்கு கம்பளி, போர்வைகளை வழங்கும் முறையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், இந்த முறை நடைமுறைக்கு வருவதால், ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
**-வினிதா**